பிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது
கொழும்பு: யாழ் பல்கலைக் கழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் ஆன்டன் பாலசிங்கம் ஆகியோரின் படங்களை வைத்திருந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இலங்கை அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் பலத்த சோதனைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக புகழ்பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தியுள்ளனர்.
ராணுவப் படைகள் மற்றும் மோப்ப நாய் சகிதம் நடைபெற்ற இந்த சோதனையில் மாணவர் சங்கத்தினர் அறையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் ஆன்டன் பாலசிங்கம் ஆகியோரின் படங்கள் இருந்துள்ளன. இதனால் மாணவர் சங்க தலைவர் திவாகரன், செயலாளர் பத்ரிராஜ் ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான கணேசன். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் பல்கலைக் கழகத்திற்கு உள்ளே சென்று அவசர கால சட்டத்தை பயன்படுத்தி இணையதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி மாணவர் தலைவர்களை கைது செய்தது அதிகப் பிரசங்கித்தனம்.
பல்கலை மாணவர் கைது பிழையானது: வடக்கில் அரச நிருவாக, படைத்தரப்பு, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு பொறிமுறை அவசியம் - அமைச்சர் மனோ கணேசன் #lkahttps://t.co/idthqYB6lT pic.twitter.com/hS6DiAYouz
— Mano Ganesan (@ManoGanesan) May 4, 2019
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படங்கள் இணையதளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்தநிலையில், அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாகக் கருதி கைதுசெய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கக் கூடாது. எனது இந்தக் கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிபெயர்த்துக் கூறி, உங்கள் அமைச்சரே இப்படிச் சொல்கிறார், பாருங்கள் எனக் கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை. செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும்படி நானே இதை கூறுவேன்" என்பது உட்பட பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு கிடையாது என்பதால் மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய சட்டமா அதிபரின் ஒப்புதலை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் கூறியுள்ளார்.