யாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகம் விதித்த தடையை மீறி மாவீரர் நினைவுநாளை உணர்வு எழுச்சியுடன் மாணவர்கள் நடத்தியுள்ளனர்.
ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதி மாவீரர் நினைவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈழப் போராளிகளின் நினைவிடங்களில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி உறவினர்கள் அஞ்சலி செலுத்துவது நெஞ்சை கனக்கச் செய்யும்.
இந்த ஆண்டும் உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அதிபரான நிலையில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு கெடுபிடிகளை போலீசாரும் ராணுவமும் வெளிப்படுத்த தொடங்கினர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நிர்வாகமோ எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒன்றுகூடலுக்கும் அனுமதி இல்லை என தடை விதித்தது.
ஆனால் இன்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தடையை மீறி பூட்டப்பட்ட நுழைவாயிலை உடைத்துக் கொண்டு உணர்வு எழுச்சியுடன் திரண்டு மாவீரர் நினைவுநாளை நடத்தி உள்ளனர்.