என் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே!
இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிட உள்ளார்.
கொழும்பு: இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிட உள்ளார்.
இலங்கையின் அதிபராக மஹிந்த ராஜபக்சே இருந்த சமயத்தில் ராணுவ அமைச்சராக இருந்தவர்தான் கோத்தபய ராஜபக்சே. இவருக்கு கீழ்தான் இலங்கை ராணுவம் விடுதலை புலிகள் அமைப்புகளுக்கு எதிராக சண்டை போட்டது. இந்த போரில்தான் 2009ல் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சரியாக 10 வருட கழித்து தற்போது அதே கோத்தபய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மஹிந்த ராஜபக்சே தான் இருந்த இலங்கை சுதந்திர கட்சியை விட்டு விலகி, தன்னுடைய குடும்ப கட்சியான இலங்கை பொது ஜன பெரமுனா கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் இந்த கட்சியின் முதல் தேசிய மாநாடு இன்று கொழும்புவில் நடைபெற்றது. அதில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவை இலங்கை பொது ஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.
மேலும் இலங்கை பொது ஜன பெரமுனா கட்சியின் புதிய தலைவராக மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கட்சியை தொடங்கிய ஜி.எல்.பெய்ரிஸ் தலைவர் பொறுப்பை மஹிந்த ராஜபக்சேவிடம் அளித்தார்.
இதுகுறித்து பேட்டி அளித்த மஹிந்த ராஜபக்சே, வரும் டிசம்பர் மாதம் இலங்கையில் தேர்தல் நடக்க வாய்ய்ப்புள்ளது. மக்கள் எல்லோரும் என் தம்பிக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம். கோத்தபய ராஜபக்சே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார், என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது அங்கு தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.