மோடியின் அனைத்து 'ராஜதந்திரங்களும்' வீண்.. ஆதரவாளர் ரணில் பதவி போனது.. இனி சீன ஆதிக்கம்தானா?
Recommended Video
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை பிரதமராக்கியுள்ளார் அந்த நாட்டு அதிபர் சிறிசேனா. இது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மகிந்தா ராஜபக்ஷே 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியுற இந்திய உளவு அமைப்பான 'ரா' காரணம் என குற்றம்சாட்டியவர். சிறிசேனாவும் அவரும் எதிரும் புதிருமாகவே தேர்தலை சந்தித்தனர்.
இந்த நிலையில்தான், சிறிசேனா கட்சியுடன் கூட்டணி வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக்கப்பட்டார். அவர் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்தார். இதற்காகத்தான் தன்னை அதிபராகவிடாமல் இந்தியா தடுத்திருக்கலாம் என்ற எண்ணண் ராஜபக்ஷேவுக்கு இருந்து வந்தது.
இந்த நிலையில்தான், சிறிசேனா சமீபத்தில் இந்திய உளவு அமைப்பான 'ரா' தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து சிறிசேனா, பிறகு மோடிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அவ்வாறு கூறவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் ரணில் விக்ரமசிங்கே இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசிவிட்டு சென்றார்.
இலங்கை அமைச்சரவை கூட்டத்தில், புதிய துறைமுக பணிகளை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டவர் ரணில் விக்ரமசிங்கே. ஆனால், சிறிசேனாவோ சீனா பக்கம் சாய்ந்தார். இந்தியாவிற்கு ஒப்பந்தம் தர முடியாது என ரணில் டெல்லிக்கு வந்தபோது தனது அமைச்சரவை விட்டு அறிவிக்க வைத்து ஷாக் கொடுத்தார். ராஜபக்ஷேவும் சீன ஆதரவாளர்.
எனவே ரணில் பதவி பறிக்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பின்னடைவு. ரணிலை கைக்குள் வைத்து இலங்கை சீனாவுடன் நெருங்குவதை தடுக்க மோடி திரைமறைவில் எடுத்ததாக கூறப்பட்ட முயற்சிகள் இப்போது தோல்வியடைந்துள்ளன. ஆனால், ராஜபக்ஷவை மோடியின் கோபத்திலிருந்து கூல் செய்யும் வேலையை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எடுத்தார்.
மகிந்தா ராஜபக்ஷேவை கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். பிறகு அவரை விரிவுரையொன்றுக்காக டெல்லி அழைத்து வந்தார். பிறகு ராஜபக்ஷே மோடியையும் சந்தித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை சு.சாமி செய்திருந்தார். எனவே இலங்கையில் நடைபெற்ற அரசியல் மாற்றம் ஏற்கனவே மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.