கொட்டும் மழைக்கு மத்தியில் கொழும்பு சென்ற மோடி.. குடை பிடித்த சிறிசேனா!
கொழும்பு: இலங்கையில் மழைக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கம்பள வரவேற்பளித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேனா.
கொழும்பு பண்டாரநாயகா விமான நிலையத்தில் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். முன்னதாக மரபுகளை மீறி அதிபர் சிறிசேனாவே மோடியை வரவேற்கலாம் என கூறப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கொச்சிகடை அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றார் மோடி. அங்கு ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானோருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் அலரி மாளிகைக்கு மோடி சென்றடைந்தார். மோடி அங்கு சென்றபோது கனமழை கொட்டியது.
கனமழைக்கும் நடுவே மோடியை சிறிசேனா வரவேற்றார். அலரி மாளிகையில் செங்கம்பளம் விரித்து முப்படை அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் இருநாடுகளிடையேயான உறவுகள், இந்திய பெருங்கடல், வங்கக் கடல் பாதுகாப்பு குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
அலரி மாளிகையில் தமது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் மோடி நட்டு வைத்தார்.