மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்!
கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி அண்மையில் இலங்கைக்கு குறுகிய கால பயணமாக சென்றிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது ராஜபக்சே மகன் நாமலும் உடன் இருந்தார். அப்போது, தமக்கு செப்டம்பர் 17-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக மோடியிடம் நாமல் கூறினார்.
சற்றே ஆச்சர்யமடைந்த பிரதமர் மோடி, செப்டம்பர் 17-ந் தேதியை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? என நாமலிடம் கோட்டிருக்கிறார். அது ஒரு நல்ல நாள் என்பதால் தேர்வு செய்தோம் என்றார்.
பின்னர் நாமலிடம் சிரித்தபடியே, செப்டம்பர் 17-ந் தேதி எனது பிறந்த நாள் என மோடி கூறியிருக்கிறார். நாமல் ராஜபக்சே திருமணம் செய்து கொள்ள இருப்பது விளையாட்டு ஆர்வலரும் லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் நிறுவனருமான திலக் வீரசிங்கவின் மகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.