இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!
Recommended Video
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார். சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.
திடீர் சந்திப்பு
இந்த நிலையில் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். கோத்தபய ராஜபக்சே-வை நேற்று சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள்.
அரசியல் சூழ்நிலை
அதேபோல் இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இவர்கள் தீவிரமாக நீண்ட நேரம் பேசினார்கள். அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.
எப்போது வருகிறார்
இந்த நிலையில் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கோத்தபய ராஜபக்சேவின் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைய போகிறது. இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
சீனா நெருக்கம்
கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு நெருக்கமானவர். சீனாவின் தலைவர்களுக்கும் ராணுவத்திற்கும் இவர் செல்லப்பிள்ளை என்று புகார் உள்ளது. இவர் அதிபரானது இந்தியாவிற்கு சிக்கலாகும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில்தான் அவர் இந்தியா வருகிறார்.