எங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா? இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்!
இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக எந்த ஒரு தீவிரவாதியும் இந்தியாவில் ஊடுருவவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக எந்த ஒரு தீவிரவாதியும் இந்தியாவில் ஊடுருவவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரவாத அச்சம் எழுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுதான் இதற்கு காரணம்.
முக்கியமாக இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 தீவிரவாதிகள் மிக மோசமாக தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் ஊடுருவில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
கோவை மாவட்டம்
முக்கியமாக கோவை மாவட்டத்தில்தான் இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடந்து வருகிறது.
என்ன கைது
இது மட்டுமன்றி தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் தமிழகம் முழுக்க கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட நபர்கள் போலீசாரால் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
என்ன
இந்த தீவிரவாதிகள் எல்லோரும் லஸ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இலங்கை சென்று அங்கிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு ரகசியமாக நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இலங்கை இதை தற்போது மறுத்துள்ளது.
இலங்கை என்ன கருத்து
தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக தப்பிச் செல்ல வாய்ப்பு இல்லை. எங்கள் நாட்டில் இருந்து இந்தியாவில் எந்த விதமான ஊடுருவலும் நடக்கவில்லை. எங்கள் நாட்டு கடற்படையினர் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் இந்த புகாரை எங்களால் ஏற்கவே முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.