இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு: ரணில் கட்சி அதிரடி
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு, ரணில் விக்ரமசிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் வியூகத்திற்கு அடி விழும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்தார். அரசியல் சாசன 19வது திருத்தத்தின்படி அதிபரால், பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றபோதிலும், சட்ட விரோதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக்கப்பட்டார்.
இதையடுத்து ராஜபக்சேவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ரணில் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலை ராஜபக்சே எதிர்கொண்ட நிலையில், அடுத்தகட்ட சதியாக, நாடாளுமன்றத்தையே கலைத்து சிறிசேனா நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.
ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில்தான், அதிபரின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட நீதிமன்றத்தை நாட உள்ளது ரணில் கட்சி.
வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு.. ஐடி ஊழியர் மரணம்!
இதுகுறித்து, இன்று, ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி, சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சியை இலங்கை அதிபர் நடத்தி வருவதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.