அதிபராக தம்பி- பிரதமராகும் அண்ணன்..நாமலுக்கு என்ன பொறுப்பு.. என்னாகும் இலங்கையின் எதிர்காலம்?
கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சே... அவரது மூத்த சகோதரரான மகிந்த ராஜாக்சே பிரதமராகப் போகிறார். இது இலங்கையின் எதிர்காலத்தை என்னவாக்கப் போகிறது என்பதுதான் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் நடைபெறுகிற விவாதம்.
இலங்கையின் ஒவ்வொரு தேர்தலிலும் முகங்கள் மாறி மாறி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் இனத்தால் பிளவுபட்டு நிற்கும் மக்கள் வழங்கக் கூடிய ஒரு தெளிவான செய்தி இத்தேர்தல் முடிவுகளில் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலமானாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவடே இல்லாத இந்த 10 ஆண்டுகாலமானாலும் சரி.. தென்னிலங்கையில் வாழும் சிங்களர் கடும்போக்கு கொண்ட ராஜபக்சே குடும்பத்தை முழு வீச்சில் ஆதரிக்கின்றனர் என்பது ஒன்று. மற்றொன்று என்னதான் தமிழர் கட்சிகள் பத்து பதினைந்தாக நின்றாலும் ஆகக் கூடுமானவரை தமிழ்க் கட்சிகளையே தங்களது தேர்வாக வைத்திருக்கின்றனர் என்பது மற்றொன்று.
இலங்கை: புதிய பிரதமராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்சே
ததேகூவுக்கு 10 இடங்கள்
இம்முறை மிக மிக மோசமான பலவீமான நிலையிலும் கூட தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையுமே செய்யவே இல்லை என்பது தெரிந்தும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களைப் பெற முடிந்திருக்கிறது. அதாவது இலங்கையின் தேர்தல் முடிவுகள் அப்பட்டமான இன ரீதியாக பிளவுபட்டு நிற்பதைத்தான் இந்த தேர்தலும் வெளிப்படுத்தி இருக்கிறது.
இனம் சார் பிரச்சனைகள்
ஆனால் கடந்த காலங்களைப் போல இந்த தேர்தல் முடிவுகளை இப்போதும் பிரதமராகப் போகிற ராஜபக்சேவும் உணரப் போவது இல்லை- அதிபராக இருக்கும் தம்பி கோத்தபாய ராஜபக்சேவும் உள்வாங்கப் போவது இல்லை. மாறாக இலங்கையில் இனரீதியான சிந்தனைப் போக்கே வளர்ந்துவிடவே கூடாத என்கிறவகையிலான நடவடிக்கைகளையும் நெருக்கடிகளையும்தான் உருவாக்கப் போகிறார்கள்.
அதிகாரப் போட்டி
இன்னொரு அபாயமும் இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. எத்தனையோ குடும்ப சாம்ராஜ்யங்கள் அதிகாரத்தால் அழிந்து போகின்றன.. அந்த சாம்ராஜ்யங்களால் மட்டுமல்ல.. தேசங்களும் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போயிருக்கின்றன. இலங்கையில் யாருக்கு அதிக அதிகாரம்? என்கிற கோதாவில் அண்ணனும் தம்பியும் குதிக்க முடிவு செய்துவிட்டால் இலங்கையும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கும்.
நாமல் ராஜபக்சே
ஏனெனில் மகிந்த ராஜபக்சே தமது அரசியல் வாரிசாக மகன் நாமல் ராஜபக்சேவைத்தான் முன்னிறுத்துகிறார். நாமல் ராஜபக்சேவை மேலும் வலிமையாக்க அத்தனை நடவடிக்கைகளையும் ராஜபக்சே முயற்சிப்பார். இதை கோத்தபாய ஏற்க மறுத்து பிரதமருக்குரிய அதிகாரங்களை குறைத்தால் குடும்பத்தில் குத்துவெட்டு நிச்சயம் அரங்கேறும். இதனை சர்வதேச ஊடகங்களும் மேம்போக்காக சுட்டிக்காட்டியும் இருக்கின்றன.
Recommended Video
இலங்கையின் எதிர்காலம் என்னவாகும்?
இனவாத அரசியல், பிராந்திய சகுனிவிளையாட்டுகள், குடும்ப அரசியல்கள் இவை அல்லாத ஒரு இலங்கையை ராஜபக்சே சகோதரர்களால் கட்டி எழுப்பிவிட முடியுமா? என்பது கேள்விக்குறிதான். அப்படியான ஒரு இலங்கையை ஏதேனும் ஒரு புள்ளியில் ராஜபக்சேக்கள் சிந்தித்தாலே சுபிட்சமான தேசத்தை கட்டி எழுப்பிவிட முடியும். ஆனால் அதிகாரப் பசி யாரை சும்மாவிட்டு வைக்கும்? இனவெறியில் கொழுத்தவர்கள் திமிராமலா இருப்பார்கள்?