தீவிரவாத செயல்களால் இலங்கையின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது: மோடி
கொழும்பு: தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களால் இலங்கையின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
மாலத்தீவில் இருந்து இலங்கைக்கு குறுகிய பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. கொழும்பு விமான நிலையத்தில் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்துக்கு மோடி சென்றார். ஈஸ்டர் நாளில் தீவிரவாதிகள் இந்த தேவாலயத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருந்தனர்.
இத்தாக்குதலில் பலியானோருக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களால் இலங்கையின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது. இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமைகாக நிற்கிறது.
இலங்கை நிச்சயம் எழுச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிபரின் அலரி மாளிகையில் மோடிக்கு முப்படை வரவேற்பளிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி. முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில், 4 ஆண்டுகளில் 3 வது முறையாக இலங்கைக்கு வருகை தருகிறேன். இந்தியா எப்போதும் உற்ற நட்புநாடுகளை மறந்தது இல்லை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.