பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா?கூசாமல் பொன்சேகா பொய்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் கூட அந்த இயக்கத்தின் சிறார் படை கட்டளை அதிகாரியாக இருந்தார் என இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக தமிழ் எம்.பி. கஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு சரத்பொன்சேகா கூறிய பதில்:
பிரபாகரன் குடும்பம்
பிரபாகரன் சீருடை அணிந்த பயங்கரவாதி. அவரது மனைவி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விநியோகப் பிரிவு பொறுப்பாளர். மூத்த மகன், புலிகள் இயக்கத்தின் கர்னல் நிலை அதிகாரியாக இருந்தவர். பிரபாகரனின் மகளும் புலிகள் இயக்கத்தில் மேஜர் என்ற நிலையில் இருந்தார்.
சிறார் படை கட்டளை அதிகாரி
இளைய மகன், சிறார் படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். அதாவது ஒட்டுமொத்த பிரபாகரனின் குடும்பமே பயங்கரவாத இயக்கத்தில் இருந்தவர்கள்தான். அதனால் அந்த குடும்பமே அழிக்கப்பட்டுவிட்டது.
பாலச்சந்திரன் படுகொலை
இதில் பிரபாகரன், மூத்த மகன் ஆகியோரது உடல்கள் மட்டும்தான் கிடைத்தன. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பங்கர் ஒன்றுக்குள் தமிழர்கள் அணியும் கைலியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தோம். அது இலங்கை ராணுவ முகாம் அல்ல. அது எங்களது முகாமாக இருந்திருந்தால் டிரவுசரும் சட்டையும்தான் பாலச்சந்திரனுக்கு கொடுத்திருப்போம்.
இலங்கை ராணுவம் மீது பொய்யான பழி
அதேபோல் பாலச்சந்திரனுக்கு அருகே இந்திய ராணுவ சீருடையை அணிந்து சிலர் நிற்கின்றனர். இது வழக்கமாக விடுதலைப் புலிகள் அணியும் உடை. ஆகையால் இலங்கை ராணுவம்தான் படுகொலை செய்தது என்பது போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்பாமல் இருக்க வேண்டும். இவ்வாறு பொன்சேகா கூறினார்.