ஊழல் வழக்கு.. சிக்கலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.. இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம்?
கொழும்பு: மோசடி மற்றும் ஊழல் குறித்து விசாரிக்கும் அதிபர் விசாரணை ஆணையம் (பி.சி.ஓ.ஐ) முன்னிலையில், ஆஜராக இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுக்கு சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழு பிரதமர் ரணிலை வரும், வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், விவசாய அமைச்சகத்தின் கட்டிடம் தொடர்பான புகாரில் ஆதாரம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அதாவது, நாடாளுமன்ற துறை மேற்பார்வை குழுக்களின் நடவடிக்கைகளுக்கு விவசாய அமைச்சகத்தின் கட்டிடத்தை பயன்படுத்த அமைச்சரவை ரணிலின் அமைச்சரவை முன்மொழிந்தது. இதை அடுத்து 2015ல் விவசாய அமைச்சகம் தனது கட்டிடத்தை காலி செய்திருந்தது.
இதன்பிறகு அந்த அமைச்சகம் ஒரு மாதத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்தி புதிய கட்டிடத்தை வாங்கியது. இதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக பிரதமருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர், மைத்ரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான, தொடர்ச்சியான அதிகாரப் போராட்டத்திற்கு மத்தியில் இந்த விசாரணை நடைபெற உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமரை பதவி நீக்கம் செய்துவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் மைத்ரிபால சிறிசேனா. ஆனால் இந்த உத்தரவை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தடை செய்து, விக்ரமசிங்க பிரதமராக தொடர வழிவகை செய்தது.
இந்த நிலையில், ரணிலுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.