இலங்கை குண்டுவெடிப்புகள்... சர்வதேச நாடுகள் இவ்வளவு ஜரூராக ஓடி ஓடி களம் இறங்குவது ஏன்?
Recommended Video
கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததுதான் தாமதம்.. இதற்காகவே காத்திருந்தது போலவே 'சர்வதேச' சந்தேக சக்திகள் பொங்கி பேசுவதும் உடனடியாக இலங்கைக்கு ஓடி வந்து 'களமாடுவதும்' 'ஏதோ' நடந்திருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகவே அம்பலப்படுத்தி நிற்கின்றன.
உலகை அதிரவைக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தொடர் கதையாகவே இருந்து வருகின்றன. இந்த பட்டியலில்தான் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் அதனை அடுத்து நடந்து வரும் எதிர்விளைவுகளும் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாம் நடத்தும் தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்றுவிடுவது வழக்கம். ஆனால் இலங்கை விவகாரத்தில் 'சில நாட்கள்' கழித்து அந்த அமைப்பின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோரப்பட்டது. அந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்திய ஊடகங்கள் அனைத்துமே இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் என எழுதித் தள்ளிவிட்டன; மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களும் இதனையே செய்தன. ஆனால் தொடர்புடைய இலங்கை ஊடகங்கள், இலங்கை அரசு காத்திருந்தன.. எந்த முடிவுக்கும் வராமல் இருந்தன.
வலதுசாரி முந்திரிகள்
இதே காலகட்டத்தில் இந்திய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வலதுசாரிகளுமே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமே இதற்குக் காரணம் என பிரகடனம் செய்துவிட்டன. அத்துடன் இந்த வலதுசாரி சக்திகள் நின்றிருந்தால்கூட சந்தேகம் எழுந்திருக்காது. இதன் மூலமாக மகிந்த ராஜபக்சே அரசாங்கம் மீண்டும் அமைய வேண்டும்; மகிந்த ராஜபக்சேவால்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும்; இலங்கைக்கு தேவை தடாலடி டிரம்ப்தான் என்கிற வசனங்களைப் பேசியதுதான் இடிக்கின்றன.
நீலிக் கண்ணீர் ராஜபக்சே
இப்படி சம்பந்தமே இல்லாமல் மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என வலதுசாரி சுப்பிரமணியன் சுவாமிகள் கூச்சலிடும்போது இலங்கையில், கோத்தபாய ராஜபக்சேவை அதிபர் தேர்தலில் வெற்றி பெற வைக்கவே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டிருக்கலாம்; மூத்த அமைச்சர்கள், மாஜி ஆளுநர்கள் பலருக்கும் தாக்குதலை நடத்திய தவ்ஹீத் அமைப்புடன் தொடர்பு என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய மகிந்த ராஜபக்சேவும் தம்மால்தான் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என நெக்குருகிப் பேசி சிங்களர் இதயங்களில் சிம்மாசனம் போட்டுப் பார்க்கிறார்.
ஓடிவந்த வெளிநாடுகள்
இதே நேரத்தில் சர்வதேச நாடுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக காத்திருந்தவர்கள் போல உடனடியாக விமானம் ஏறி கொழும்பு வந்துவிட்டனர். அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாட்டு அதிகாரிகள் இப்போது இலங்கையில் 'விசாரணை' நடத்துகிறார்களாம். அமெரிக்க திருச்சபையினரோ மட்டக்களப்பு காத்தான்குடிக்குப் போய் இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறது.
சந்தேகம் தரும் வருகைகள்
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது எட்டிப்பார்க்காத 'மனிதாபிமான' தேசங்கள்தான் வெந்நீரை காலில் ஊற்றிக் கொண்டவர்களாக இலங்கைக்கு படை எடுக்கின்றன. இந்த திடீர் படையெடுப்புதான் பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.
சிரியாவில் யு.எஸ்., ரஷ்யா
பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குகிறோம் என்கிற போர்வையில் நாடுகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது காலம் காலமாக வல்லாதிக்க அரசுகள் கடைபிடிக்கும் உத்திதான். சிரியாவில் அமெரிக்கா ஒரு பக்கம், ரஷ்யா ஒரு பக்கம், துருக்கி ஒரு பக்கம் என ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் வேடிக்கையானது என்னவெனில் ரஷ்யா எதிர் தாக்குதல் நடத்தியது, அமெரிக்கா ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் மீதுதான். இதுதான் இந்த மனிதாபிமான தேசங்களின் நிஜமுகம்.
இந்திய வெளியுறவுக் கொள்கை
இந்த தேசங்கள்தான் இப்போது இலங்கை நோக்கி ஓடோடி வந்திருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் 1990கள் வரை இந்தியாவின் கண்ணசைவின்றி ஒரு வெளிநாடும் உள்ளே நுழைய முடியாது. அப்படியாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வலிமையாக இருந்தது. 1990களுக்குப் பின்னர் இந்திய வெளியுறவுக் கொள்கை நீர்த்துப் போனதால் இலங்கை உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளின் குடுமிபிடியை இந்தியா இழக்க நேரிட்டது. அந்த இடத்தை அப்படியே சீனா கைப்பற்றிக் கொண்டது. இலங்கையில் இந்தியா, சீனா இரு நாடுகளின் ஆதிக்க போட்டி இன்னமும் ஓயவில்லை.
நார்வே- புலிகள்- எண்ணெய் வளம்
இந்த நிலையில்தான் கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம், எரிவாயு வளம் குறித்த சர்வதேச ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2002-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக நார்வே நாட்டு நிறுவனத்துக்கு இப்படியான ஒரு ஆய்வுக்கு ஒப்புதல் கொடுத்தார்கள். நார்வே நிறுவனத்தின் வேலை என்னவென்று பார்த்தால் உலகில் எங்கெல்லாம் ஆயுத போராட்டங்கள், சுதந்திர குரல்கள், கலகக் குரல்கல் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் மூக்கை நுழைத்து 'சமாதானம்' பேசும். அப்படியே அந்த நாடுகளின் இயற்கை வளம் குறித்த ஆய்வுகளுக்கும் அனுமதி பெறும். இந்த நார்வேயைத்தான் உலகம் , அமெரிக்காவின் மென்மை முகம் என எழுதி வைத்திருக்கிறது.
எண்ணெய் ஆய்வு குறித்து சீனாவுக்கு அனுமதி
நார்வே நிறுவனமானது மன்னார் கடற்பரப்பில், காவிரி படுகையின் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் எண்ணெய்வளம் இருப்பதை உறுதி செய்தது. இதன் பின்னரும் இலங்கை பல ஆய்வுகளை மேற்கொண்டு அண்மையில் சீனாவும் ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.
இன்று விசாரணை புலிகளான தேசங்கள்
இந்த நிலையில் திடீரென பயங்கரவாதத் தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடத்தப்படுகிறது; பிஞ்சு குழந்தைகள் 47 பேர் உட்பட 359 பேர் பலியாகிப் போனார்கள். ஐ.நா. சபை கூட 47 பிஞ்சு பிள்ளைகள் என தெளிவாக குறிப்பிடுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் என 'சக்திவாய்ந்த' தேசங்கள் எல்லாம் இலங்கைக்குள் விசாரணை என்ற பெயரில் கால் வைத்துள்ளன. போர்க்குற்றத்தை எதிர்கொண்டிருக்கும் இலங்கை- சர்வதேச நீதிநெறிமுறைகளை மதிக்காத இலங்கை- பல்லாயிரக்கணக்கில் காணாமல் போனோர் பற்றி வாய் திறக்காத இலங்கை.. என சர்வதேச மன்றத்தில் குற்றவாளியாக இருக்கும் இலங்கையை வன்மையாக கண்டிக்காத தேசங்கள் அனைத்தும் இப்போது குய்யோ முறையோ என கூப்பாடு போட்டுக் கொண்டு இலங்கைக்கு ஓடி வருகின்றன...
இப்படி அவை ஓடி வருவதில் எத்தனை சங்கதிகளும் சதிகார மூளைகளும் புதைந்து கிடக்கின்றனவோ? வரலாற்றுக்கே வெளிச்சம்!