எங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கொடுங்க... இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் இலங்கை!
கொழும்பு: இந்தியாவில் இருந்து இலவச தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.
இந்தியா நேபாளம், பூடான், மாலத்தீவு, மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் தடு்ப்பூசிகளை விநியோகம் செய்து வருகிறது. நேபாளம், பூடான், மாலத்தீவு, மியான்மர் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடு்ப்பூசிகளை வழங்கியுள்ளது.
ஏற்கனவே நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு 1½ லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும், வங்காளதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவின் மிக முக்கியமான அண்டை நாடான இலங்கையும் இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே வலல்லாவிதாவில் உரையாற்றியபோது கூறியதாவது:-
இந்தியாவில் இருந்து இலவச தடுப்பூசிகளைப் பெறுவதற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. முன்னணி சுகாதார ஊழியர்கள், ராணுவம் மற்றும் காவல்துறை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியா மட்டுமின்றி சீனா, ரஷ்யாவிடம் இருந்தும் நாம் தடுப்பூசி பெறுவோம் என்று கோத்தபய ராஜபக்சே கூறினார்.
இது தொடர்பாக இந்திய தூதரகம் கூறுகையில், 'இலங்கை அரசாங்கத்தால் கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வரவேற்கிறோம்.. இது இந்தியா முதல் எல்கா வரை தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை தெளிவுபடுத்துகிறது என்று கூறியுள்ளது.