பதவி விலகுகிறார் ராஜபக்சே.. மீண்டும் இலங்கை பிரதமராகிறார் ரணில்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தது சட்டவிரோதம் என்று இலங்கை சுப்ரீ்ம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில் முன்னாள் அதிபரும், சிறிசேனாவால் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டவருமான ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு பதவி விலகவுள்ளதாக அவரரது மகன் நமல் ராஜபக்சே டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நாளை தனது பதவியிலிருந்து ராஜபக்சே விலகவுள்ளார். இதன் மூலம் இலங்கை அரசியலில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார். இலங்கை மக்கள் கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும், மற்றவர்களும் இணைந்து அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து மிகப் பெரிய கூட்டணியை அமைக்க பாடுபடுவார்கள் என்று நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
முன்னதாக சிறிசேனாவிடமிருந்து விலகி சொந்தக் கட்சி ஆரம்பித்தார் ராஜபக்சே. ஆனால் தற்போது சிறிசேனாவுடன் இணைந்து செயலாற்றப் போவதாக அவரது மகன் கூறியுள்ளதால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு குடைச்சல் தொடர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மீண்டும் ரணில்:
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கே வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த எம்.பி. ரஜித சேனரத்னே கூறியதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"UNP leader Ranil Wickremesinghe will take oath as Prime Minister on Sunday at 10 am, President Sirisena and Ranil Wickremesinghe had a discussion over the phone short while ago" Senior UNP MP Rajitha Senaratne to BBC
— Azzam Ameen (@AzzamAmeen) December 14, 2018
பதவியேற்பு குறித்து ரணில் விக்கிமரசிங்கே, அதிபர் சிறிசேனாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாகவும், இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பு நடைபெறவுள்ளதாகவும் சேனரத்னே கூறியதாக பிபிசி நிறுவன செய்தியாளர் அஸ்ஸம் அமீன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.