இதுக்கு எதுக்கு யூ டர்னாம் போட்டு.. டேபிள ஒடச்சி.. இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் இன்று பதவியேற்பு
கொழும்பு: இலங்கை பிரதமராக இன்று மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கிறார்.
இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி அதிபர் மைத்ரிபால் சிறிசேனா நீக்கி அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.
இதை எதிர்த்து, ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நேற்றுமுன்தினம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாடாளுமன்ற பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் புதிய பிரதமரை 17ம் தேதி நியமிக்க போவதாகவும், ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் நியமிக்க போவதில்லை என்றும் சிறிசேனா தெரிவித்து இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.
இன்று காலை 10.30 மணிக்கு ரணில்விக்ரமசிங்கே 5வது முறையாக இலங்கை பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்கிறார். இதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த எம்.பி.யான ரஜிதசேனரத்னே நேற்று தெரிவித்தார்.
அதிபர் சிறிசேனாவுடன் பதவியேற்பு குறித்து தொலைபேசியில் ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை செய்துள்ளார். இதன் மூலம், இலங்கையில் கடந்த 50 நாட்களாக நடைபெற்று வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.
மீண்டும் ரணிலே பிரதமராக பதவியேற்பதை வைத்து பார்த்தால், இதற்கு எதற்கு யூ டர்ன் போட்டு, டேபிளையெல்லாம் ஒடச்சீங்க என்ற வடிவேலு பட டயலாக் நினைவுக்கு வருகிறது.