திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இலங்கை பிரதமராக மீண்டும் அரியணை ஏறினார் ரணில் விக்ரமசிங்கே!
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போதுதான் முடிந்து இருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து பல குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து நடந்த பல அரசியல் திருப்பங்கள், ஸ்டண்டுகள் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
பிரதமர் பிரச்சனை
கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே தான்தான் பிரதமர் என்று கூறினார். இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராஜபக்சே தோல்வி
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் ராஜபக்சே தொடர்ந்து தான்தான் பிரதமர் என்று கூறினார். அதோடு பதவி விலகவும் மறுத்து வந்தார். அதேபோல் ரணிலும் தன்னை பிரதமர் என்று கூறி வந்தார்.
பதவி விலகினார்
இந்த நிலையில் ராஜபக்சேவை நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அக்கடிதத்தை அதிபர் சிறிசேனாவிற்கு அனுப்பினார். தனக்கு போதிய ஆதரவு இல்லாததை அடுத்து ராஜபக்சே நேற்று பதவி விலகினார்.
மீண்டும் பிரதமர்
இந்த நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்கேவிற்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இன்று புதிய அரசியல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு நிலவிய பெரிய அரசியல் குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது.