இலங்கை அதிபர் தேர்தல்... கோத்தபாய ராஜபக்சேவுடன் மோதுகிறார் ரணில் விக்கிரமசிங்கே?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ்பக்சே இருவரும் போட்டியிடக் கூடும் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே களமிறங்குவார் என கூறப்பட்டு வருகிறது. இதற்காகவே கோத்தபாய ராஜபக்சே, தமது அமெரிக்கா குடியுரிமையை கைவிடுவதாக விண்ணப்பம் கொடுத்திருந்தார்.
அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சே மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் போர் குற்ற வழக்குகள் தொடரப்பட்டும் உள்ளன. இன்னமும் கோத்தபாயவின் குடியுரிமையை அமெரிக்காவும் ரத்து செய்யவில்லை.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கே போட்டியிடாமல் போனால் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி யானை சின்னத்திலும் பொதுஜன பெரமுனவானது மலர் மொட்டு சின்னத்திலும் போட்டியிட உள்ளன.
இந்த ஆண்டின் கடைசியில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே தாம் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் என கோத்தபாய கூறிவருவது குறிப்பிடத்தக்கது.