உலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை
Recommended Video
கொழும்பு: உலகின் முதல் விமானியே ராவணன்தான் என்றும் ராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்யப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்துறை வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், புவியியல் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில்தான் 5,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகின் முதல் விமான ஓட்டியாக ராவணன் திகழ்ந்தார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இந்தியாவில் இருந்து ராமனின் மனைவி சீதையை ராவணன் கடத்தி வந்ததாக கூறப்படுவதை பலரும் இக்கருத்தரங்கில் ஏற்கவில்லை. சீதையை கடத்தியதாக கூறுவது இந்திய இதிகாசங்கள்தான் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கை அண்மையில் ராவணா என்று பெயரிடப்பட்ட செயற்கைகோளை விண்ணுக்கும் அனுப்பியிருந்தது.
இலங்கையை பொறுத்தவரையில் ராவணன் போற்றுதலுக்குரிய பேரரசராக பார்க்கப்படுகிறார். இந்திய காப்பியங்கள் சிலவும் கூட ராவணனை மகா பிராமணன் என குறிப்பிடுகின்றன.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்து துறை துணை தலைவர் சசி தனதுங்கே, ராவணன்தான் உலகின் முதல் விமானி. இது கற்பனையல்ல. வரலாற்று உண்மை.
ராவணன் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதை விரைவில் நிரூபிப்போம் என்றார்.