இலங்கை கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக பரவிய தகவல்.. போலீசார் மறுப்பு
கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என அந்நாட்டு போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் கூடியிருந்த மக்களை குறிவைத்து, 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த கொடூர தாக்குதலில் 290 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்?.. யார் அந்த ''01'' குழு?.. இலங்கை அரசு புதிய விளக்கம்!
இதனால் இலங்கை முழுவதும் உச்சகட்ட பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையதள சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் இலங்கை மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டது. குறிப்பாக கொழும்பின் களனி, கிரிபத்கொட. ஜாஎல ஆகிய பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இது உண்மைக்குப் புறம்பான போலியான தகவல் என இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மக்கள் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.