இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயாவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனாவின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந் தேதி நடைபெறுகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களத்தில் நிற்கிறார். இவரது பதவி காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.
அவரை எதிர்த்து பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன். இந்த இரு வேட்பாளர்களுக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. மொத்தம் 35 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
We welcome Sri Lanka Freedom Party, who joined hands with us in this victorious journey today pic.twitter.com/qYnK3SvP30
— Gotabaya Rajapaksa (@GotabayaR) October 9, 2019
கோத்தபாயவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமே தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் அதிபர் சிறிசேனாவின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, கோத்தபாயவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிபர் சிறிசேனா தாம் நடுநிலை வகிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளைப் பெற முயன்றது கூட்டமைப்பு. ஆனால் சஜித் பிரேமதாச எந்த பிடியும் கொடுக்கவில்லை. இதனால் கோத்தபாய ராஜபக்சேவுடனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.