இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா?... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி
Recommended Video
கொழும்பு: இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் தொடரலாம், என இலங்கை ராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கணிப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அவசரநிலை உத்தரவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் என்ற அரசு அறிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா கையெழுத்துட்டுள்ளார். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த குண்டு வெடிப்பை இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டு சி4 ரகத்தை விட அதிக எரிசக்தி கொண்டது. எனவே இந்த வெடிகுண்டுகளை தயாரிக்க நிறைய ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதினர். இந்த விவகாரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு இருப்பதால் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்தது.
பின்னர், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்பட்ட 5 பேரை இலங்கை போலீசார் துபாயில் கைது செய்தனர். மேலும், இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றக்குழு முன்னிலையில் ஆஜராகிய இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என்று கணிப்பை கூறினார். இது சர்வதேச தீவிரவாதம் என்றும் தற்போது ராணுவம் முகம் தெரியாத எதிரியுடன் யுத்தம் செய்வதாகவும் கூறினார். முப்படை மற்றும் புலனாய்வு பிரிவின் உதவியுடன் தீவிரவாத வளர்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.