"ரணில் அரசுக்கு ஆதரவு தருகிறோம், ஆனால்!"கடைசியில் ட்விஸ்ட் வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவலுக்குப் பின்னர், இலங்கை நாட்டில் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நிலையை மேம்படுத்த அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகளும் கூட பலன் தரவில்லை.
21 கிமீ! 7 என்ட்ரி! 6 எக்சிட்! டபுள் டக்கர் பாலம்.. சென்னை துறைமுகத்திற்கு இனி பறக்கலாம்! சூப்பர்
இதனால் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததில் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
புதிய பிரதமர்
இதையடுத்து முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்த மகிந்த ராஜபக்ச, பின்னர் நிலைமை மோசமானதை உணர்ந்து பதவி விலகினார். இப்படி மிகவும் இக்கட்டான சூழலில், ரணில் விக்ரமசிங்க இலங்கை நாட்டின் 26ஆவது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே, வரும் காலம் மோசமாக இருக்கும் என்றும் நாட்டின் நிலைமையை மீட்டெடுக்க இரு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.
திடீர் ஆதரவு
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இப்போது திடீரென அவருக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமகி ஜன பலவேகயா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொறுப்பான அரசியல் கட்சியாக, தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என்று நம்புகிறோம்.
ஆனால் ஒரு நிபந்தனை
அதனடிப்படையில், அமைச்சரவையில் இடம் பெறாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக, இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய அரசின் முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. அதேநேரம் எங்கள் கட்சியைப் பிளவுபடுத்த முயன்றால் அல்லது எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக அரசு நடந்தால் இந்த ஆதரவு நிபந்தனையின்றி வாபஸ் பெறப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
மேலும் இது தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சஜித் பிரேமதாச அளித்த பேட்டியில், "இந்த நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்குமா என்பது அரசிடம் முன்வைக்கப்படும் கேள்வி. நாங்கள், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, பொது மக்களின் துன்பத்தைப் போக்கும் பாசிட்டிவ் திட்டங்களுக்கு ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்னும் அதிபர் பதவியில் இருந்து விலகவில்லை. அவர் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை. இதனால் தான் அனைத்து கட்சியினரும் சேர்ந்து அரசை அமைக்கும் கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.
எதிர்க்கவில்லை
உணவுப் பாதுகாப்பு, எரிபொருள், மின்சாரம், எரிவாயு, உரம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும் எந்தவொரு கொள்கையையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கவில்லை. அத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு ஆதரவளிப்போம். அதேநேரம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளை உடைக்க முயலக் கூடாது. நாடு இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நிலையில், யாரும் அரசியல் செய்யக் கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆதரவை வாபஸ் பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு நன்றி
மேலும், இலங்கையில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிக்கும் உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்தார். இந்த நேரத்தில் இந்தியா செய்துள்ள உதவி இன்றியமையாதது மற்றும் மிகவும் மதிப்புமிக்கது என்று கூறிய அவர், இலங்கை இப்போது சிக்கியுள்ள நிலைமையில் இருந்து மீண்டு வர மேலும் உதவிகள் தேவை என்றும் குறிப்பிட்டார்.