இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது.
இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது.
இந்திய - சீன மோதல்.. மத்தியசம் பேச முயன்ற டிரம்ப்.. இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த அதிரடி பதில்!
ராஜபக்சேவின் சீனா சார்பு
என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு.
நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள்
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்:
இலங்கை அணி சேரா கொள்கை
இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர்.
பஞ்சசீல கொள்கை
இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.