சக்சஸ்- மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டம்: அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுத்தது இலங்கை!
கொழும்பு: இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையின் மன்னார் வளைகுடா கடற்பரப்பு நீண்டகாலமாக சர்வதேச நாடுகளால் இலக்கு வைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் 2002-ம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவான போது, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட்ட நார்வேதான் இன்னொரு பக்கம், மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்தது. மன்னார் தொடங்கி தமிழகத்தின் காவிரி படுகை கடலோரப் பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் கொட்டிக் கிடக்கிறது என நார்வே ஆய்வு அறிக்கை கொடுத்தது. பின்னர் இந்தத் திட்டம் அவ்வப்போது பேசுபொருளாக இருப்பதும் கிடப்பில் போடப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடாவில் மெகா காற்றாலை திட்டத்தை இலங்கை அமைக்கப் போவதாக கூறப்பட்டது. மன்னார் வளைகுடா என்பது இந்தியாவின் தென் எல்லை தொடக்கமான தமிழ்நாட்டுக்கு மிக மிக அருகே உள்ள பகுதி. ஆகையால் இந்த காற்றாலைத் திட்டத்தை பெறுவதற்கு இந்தியா, இலங்கையுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் இலங்கை அரசாங்கமோ திடீரென சீனாவுக்கு இந்த மெகா காற்றாலைத் திட்டத்தை கொடுத்தது.
மன்னார் வளைகுடாவில் சீனா ஊடுருவுவதற்கு இலங்கையே சிவப்புக் கம்பளம் விரித்தது இந்தியாவை கடும் கோபம் அடைய வைத்தது. சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் காற்றாலை திட்டம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. ஒருகட்டத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சீனாவுக்கு மெகா காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை இலங்கை அரசு ரத்து செய்தது. இதனால் சீனா கொந்தளித்தது.
இந்நிலையில் இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் கஞ்சன விஜேசகர தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி குழுமத்துக்கு மன்னாரில் 286 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை, பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை 500 மில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
டோர்னியர் விமானம் அன்பளிப்பு.. ராமர்-ராவணனை கூறி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்!