விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் ராவணன்- மிகப் பெரிய ஆய்வில் இறங்கும் இலங்கை
கொழும்பு: உலகத்திலேயே விமானத்தை பயன்படுத்தியது தங்களது மாமன்னர் ராவணன் என்று கூறி வரும் இலங்கை, தற்போது ராவணன் குறித்து மிகப் பெரிய ஆய்வு ஒன்றில் இறங்கியுள்ளது.
இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதில் உச்சகட்டமாக நேபாளம்தான் மிக மோசமாக இந்தியாவிடம் நடந்து வருகிறது.
நேபாளம்- ராமர்
இந்திய நிலப்பகுதிகளை உரிமை கொண்டாடியது நேபாளம். இதற்காக புதிய வரைபடத்தை உருவாக்கி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றது நேபாளம். அத்துடன் கடவுள் ராமர் பிறந்தது நேபாளத்தில் உள்ள அயோத்தியில்தான் என கூறியது. அத்துடன் நிற்கவில்லை.. ராமர் இந்தியரே அல்ல.. அவர் ஒரு நேபாளி என்றும் அந்த நாட்டின் பிரதம ஷர்மா ஒளி கூறினார். இது மிகப் பெரிய சர்ச்சையானது.
ராவணனை முன்வைத்து இலங்கை
தற்போது ராமாயணத்தை முன்வைத்து இலங்கையும் இந்தியாவை சீண்ட தொடங்கி உள்ளது. நேபாளத்தைப் போல பகிரங்கமாக இல்லாமல் தொல்லியல் துறை, ராவணன் பெருமை பேசுகிறோம் என்கிற தொனியில் தற்போது களமிறங்கியுள்ளது இலங்கை. இது தொடர்பாக இலங்கையில் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை- ராவணன் ஆய்வு
இலங்கையின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராவணன் இந்தியாவுக்கு விமானம் இயக்கிய வான்வழித் தடம் குறித்த ஆய்வை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
ராவணன் செயற்கைகோள்
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் காப்பியமான ராமாயணத்தில் சொல்லப்படும் ராவணன், விமானத்தை பயன்படுத்தினார் என்பது உண்மை. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விமானங்களை இயக்கிய பேரரசன் என்றெல்லாம் புகழாரம் சூட்டினர். இப்போது கூட ராவணன் பெயரில் இலங்கை செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.