கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய விதித்த தடையை நீக்கியது இலங்கை அரசு
கொழும்பு: கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது, இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் புதைக்க அனுமதிக்க முடியாது என்றும்
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கை அரசு புதிய விதிமுறைகளை விதித்தது.
கொரோனா வைரஸ் உள்ளவர்களை பூமியில் புதைத்தால் நிலத்தடி நீரை மாசுப்படும் என்றும் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்றும் கூறி அடக்கம் செய்ய இலங்கை அரசு கடந்த ஆண்டு தடை விதித்து.
தடையை நீக்க வேண்டும்
ஆனால் இஸ்லாமிய அமைப்பினர் அரசாங்கத்தின் முடிவு விஞ்ஞான அடிப்படை இல்லை என்றும், உடலை எரிப்பது என்பது தங்களின் இஸ்லாமிய இறை நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், அடக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இம்ரான் கான் உடன் சந்திப்பு
கடந்த புதன்கிழமை, இலங்கை நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். அப்போது இலங்கை அரசின் தலைவர்களிடம் இப்பிரச்சினையை எடுத்துக்கூறி தடையை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மனித உரிமை மீறல்
இது ஒருபுறம் எனில், ஐநா மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தின் (OHCHR) தலைவர் மைக்கேல் பேச்லெட், கடந்த புதன்கிழமை அன்று ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் உத்தரவிற்கு எதிராக அறிக்கையை வெளியிட்டார். .
"கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கடடாயம் எரிக்க வேண்டும் என்ற கொள்கை, சிறுபான்மை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.
தடையை நீக்கியது
முன்னதாக கடந்த செவ்வாய்கிழைமை இஸ்லாமிய அமைப்பினர், இலங்கை அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக பெரிய போராட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கை மருத்துவர்கள் கூறினார்கள், இதை ஏற்று கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது, இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.