அப்பாவி உயிர்களை பலியெடுப்பதா.. கோழைத்தனம்.. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங். கடும் கண்டனம்
Recommended Video
கொழும்பு: அப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் தலைவர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை கண்டித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இன்று இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்களில் பல அப்பாவி மனித உயிர்கள் பலியாகி, ஏராளமனோர் படுகாயமடைந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் கொடூர யுத்தம் ஓய்ந்து, சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நாட்டின் பொருளாதார விருத்தியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் வெகுவாகப் பாதிக்கும் செயலாகும்.
திட்டமிட்ட இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஒருவிதமான ஒருங்கிணைப்புடன் கூடிய ஒத்ததன்மையை அவதானிக்க முடிகின்றது. கிறிஸ்தவ மக்கள் தங்களது முக்கிய மத நிகழ்வொன்றை அனுஷ்டிக்கின்ற இந்நாளில் இந்த துக்கரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது. இது மிகவும் பாரதூரமான ஜனநாயக விரோத, தேசத்துரோக செயலாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்செயல்களை வன்மையாக கண்டிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல், தாக்குதல்களின் உள்நோக்கங்களை கண்டறிந்து, இதன் சூத்திரதாரிகளை சரிவர அடையாளம்கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
இந்தக் கோர சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.
இலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 27 வெளிநாட்டினர் பலி
இன நல்லிணக்கத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படும் தீயசக்திகளின் நோக்கங்களுக்கு துணைபோகாமல், அமைதியைப் பேணி, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் அனைவரையும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.