இலங்கையை சேர்ந்த 160 பேர் சென்னையில் தவிப்பு... மீட்டுவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை
கொழும்பு: சென்னையில் கடந்த ஒரு மாதமாக சிக்கித் தவித்துவரும் 160 இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர வேண்டும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சர்வதேச பயணத்தடை மற்றும் பொதுமுடக்கம் காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்திருந்த 160 பேர் சென்னையில் உள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆரியசிங்கேவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில்,
நாடு திரும்ப முடியாமல் சென்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கு நன்றி. சென்னையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் இலங்கையர்களை அவ்வாறே அழைத்துவர சிறப்பு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
அவ்வாறு அழைத்துவரும்போது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளுமாறும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.