வீடுகள் மீது வீசப்படும் கற்கள்.. அடுத்து என்ன நடக்குமோ.. அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்
Recommended Video
கொழும்பு: 41 வயதாகும், முகமது ஹாசன், கொழும்பிலுள்ள பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். ஆனால், 2 நாட்களாக அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. குடும்பத்தார் எவ்வளவோ கெஞ்சியும், மசூதிக்கு தொழுகை நேரத்திற்கு மட்டும் செல்கிறாரே தவிர வீடு திரும்ப வழியில்லை.
60 வயதாகும் ஜரீனா பேகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சரியாக தூங்கவேயில்லை.
"எனக்கு தெரியும், உள்ளூர் மக்கள் முஸ்லீம்கள் மீது கோபத்தில் இருப்பார்கள்" என்று சொல்லும்போதே, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது.
இலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.. முழு ராணுவமும் களமிறங்கியது!
கல் வீச்சு
கண்ணீரை துடைத்தபடியே தொடர்கிறார் ஜரீனா பேகம். "கைக் குழந்தையுடன் தேவாலயம் வந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள், இப்படி ஒரு துவேஷத்தை, மனதில் வைத்திருப்பார்கள் என்று நினைத்து பார்த்தது இல்லை. எங்கள் வீட்டின் மீது கூட கற்கள் வீசப்பட்டன. வெளியே வரவே எங்களுக்கு பயமாக உள்ளது" என்றார்.
இலங்கை பவுத்தர்கள்
இலங்கை மக்கள் தொகையில், முஸ்லீம்கள் எண்ணிக்கை 10 சதவீதம். இந்துக்களுக்கு அடுத்தபடியாக அந்த நாட்டின் 3வது பெரிய மக்கள் தொகை முஸ்லீம்களுடையது. முதலிடத்தில் இருப்பது பவுத்தர்கள். 7 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்கள் அங்கு உள்ளனர். இலங்கையில் முஸ்லீம்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவது உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது முதல் துவங்கிவிட்டது.
முஸ்லீம்களுக்கு எதிரான செயல்பாடு
2013 மற்றும் 2018ம் ஆண்டுகளில், முஸ்லீம்களின் தொழில், வணிகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை இலங்கையிலுள்ள கடும்போக்கு புத்த அமைப்புகள் முன்னெடுத்ததை பார்க்க முடிந்தது. முஸ்லீம்கள் ஜவுளிக்கடைகளில் உள்ளாடைகள் வாங்கினாலோ, முஸ்லீம்களின் உணவகங்களில் சாப்பிட்டாலோ, ஆண்மை பறிபோய்விடும் என்றெல்லாம் அப்போது கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்தன தீவிர வலதுசாரி பவுத்த அமைப்புகள்.
முஸ்லீம்கள் அச்சம்
இப்போது தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி, சுமார் 350க்கும் மேற்பட்டோர் கொலையாக காரணமாக இருந்துள்ளதால், பெரும்பான்மை மக்களின் கோபம் தங்கள் பக்கம் திரும்புமோ என்ற அச்சம் இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு உள்ளது.
ஒற்றுமை அவசியம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பெருவாரியான தலைவர்கள், நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது என மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை இலங்கை அரசின் தற்போதைய அத்தியாவசிய தேவையாக உள்ளது.