முதல்வர் ஸ்டாலினால் நெகிழ்ந்துபோன இலங்கை பிரதமர்.. “உங்க அன்புக்கு நன்றி இந்திய மக்களே” என ட்வீட்!
கொழும்பு (இலங்கை) : இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள் இன்று கொழும்பு சென்றடைந்தன. அந்நாட்டு அரசிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை: இன்று கொழும்பு சென்றடைகிறது தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின்-99!
இலங்கை நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
நிவாரண பொருட்கள்
தமிழ்நாடு சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் 'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் பொட்டலமிடப்பட்டன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் கடந்த 18ஆம் தேதியன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இன்று சென்றடைந்தன
தமிழ்நாடு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கையைச் சென்றடைந்தன. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் இந்த நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தார்.
ரணில் விக்ரமசிங்கே ட்வீட்
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட ரூ. 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வந்தடைந்தன எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு நன்றி
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வழங்கிய உதவியையும் பாராட்டுகிறேன் என இலங்கை பிரதமர் ரணில் விம்ரமசிங்க தெரிவித்துள்ளார்.