இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்: பேராயர் மால்கம் ரஞ்சித்
கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டதாக கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்ற போது தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் இது.
இத்தாக்குதல்களில் 279 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பொறுப்பேற்றன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள இலங்கையில் ஈஸ்டர் நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஈஸ்டர் நாளை முன்னிட்டு கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித் டிவியில் பேசுகையில், நம்மை அழிக்க நினைத்த எதிரிகளுக்கு நாம் அன்பைக் கொடுப்போம்; அவர்களை மன்னிப்போம் என கூறினார்.
இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பேராயர் மன்னிப்பு அளித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.