கொழும்பு துறைமுக பணி.. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தம் திடீர் ரத்து.. அதிர்ச்சி கொடுத்த இலங்கை
கொழும்பு: இலங்கையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்த, இந்தியாவும்-ஜப்பானும், இலங்கையுடன் போட்ட முத்தரப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு போடப்பட்ட இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை, இலங்கை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது, இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிற நாடுகளில் 'வியூக உள்கட்டமைப்பு' திட்டங்களை செய்வதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு சமீப காலத்தில் கிடைத்த 2வது பின்னடைவு இதுவாகும்.
ஈரான் நடவடிக்கை
2016ல் பிரதமர் நரேந்தர் மோடியின் தெஹ்ரான் பயணத்தின் போது ஈரானுடன், சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லை வழியாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா போட்டிருந்த போதிலும், பிறகு ஈரான், அதிலிருந்து பின்வாங்கியது. இப்போது இலங்கை அரசும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டத்திலிருந்து இந்தியாவை வெளியேற்றியுள்ளது.
ஜப்பான், இந்தியா அதிருப்தி
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து கொழும்புக்கான இந்திய தூதர், கோபால் பாக்லே, இலங்கை தலைமையுடன் தொடர், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த திட்டத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிரான தொழிற்சங்கவாதிகளின் அழுத்தத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே பணிந்து இந்த முடிவை எடுத்ததாக அந்த நாட்டு அரசு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கையின் இந்த முடிவை ஒருதலைப்பட்சமாகவும், வருந்தத்தக்கதாகவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று இலங்கையை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
ஆலோசனை
"கொழும்பில் உள்ள இந்திய ஹை கமிஷனர் இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்து வருகிறார், சர்வதேச கடமைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் உட்பட பல அம்சங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்," என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு முக்கியமானது
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இலங்கையில் சீனா செலுத்தும் செல்வாக்கை முறியடிக்க இந்த திட்டம் பயன்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சீனா ஏற்கனவே இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், தனது கப்பல்கள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்துள்ளது. சீனாவுக்கான எரிபொருள் கப்பல்கள் இந்த பிராந்தியம் வழியாக செல்கின்றன.
இலங்கை பின்வாங்கியது ஏன்
கொழும்பு கிழக்கு துறைமுக முனையத் திட்டத்தின் 49 சதவீத பங்குகள் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமானதாக இருக்கும், மீதமுள்ளவை இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் இருக்கும் என்பது 2019ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமாக இருந்தது. ராஜபக்ஷவின் கட்சி துறைமுகத்தை தனியார்மயமாக்குவதை ஒரு தேர்தல் நிகழ்ச்சி நிரலாகவே மாற்றியிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பல தொழிற்சங்கங்களின் அழுத்தம் இருந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்ஷே இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் அழுத்தங்களுக்கு பிரதமர் வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று. எனவே ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இலங்கை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
அரசியல்தான் தீர்மானிக்கிறது
"இலங்கை தனது துறைமுகத் திறனை அதிகரிக்காவிட்டால், இந்த பிராந்தியத்தில் உள்ள பிற போட்டி துறைமுகங்கள் அந்த வணிகத்தை தட்டிச் சென்றுவிடும். வளர்ச்சியைவிட அரசியல்தான் இலங்கையில் கை ஓங்கிவிட்டது" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், இப்போது இலங்கை இந்த முனையத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக 650 மில்லியன் அமெரிக்க டாலர்களை அது திரட்ட வேண்டும்.
சீனா கடன் வலை
இந்த நிதியை திரட்ட, சீனாவிடம்தான் இலங்கை போய் நிற்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இலங்கை சீனா விரித்த கடன் வலையில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பதில் இல்லை
அதேநேரம், கிழக்கு துறைமுக முனையத்திற்கு பதில், இலங்கை இப்போது இந்தியாவுக்கு மேற்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்தும் திட்டத்தை வழங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்ரீவஸ்தவா மறுத்துவிட்டார். இலங்கையின் இந்த திடீர் முடிவு, அந்த நாட்டில் இந்தியா செய்து வரும் மற்ற அபிவிருத்தி திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது இந்தியா தொடர்ந்து இலங்கையில் கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
ஈரான் ரயில் திட்டம்
இதனிடையே, ஈரானுடனான ரயில் பாதை ஒப்பந்தத்தை இந்தியா தக்க வைக்க முயற்சிக்கிறது என்று அரசு கூறியுள்ளது. புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார இணை அமைச்சர் முரளிதரன், சாபஹார்-சகேதான் திட்டத்தை செயல்படுத்த ஈரானுடன் பேசி வருகிறோம் என்று கூறியுள்ளார்.