திடீர் திருப்பம்.. சிறிசேனாவின் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே.. வேறு கட்சியில் இணைந்தார்!
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார்.
கொழும்பு: இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் சிறிசேனா.
இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு பிரதமர் பதவிக்காக ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
[இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு.. ரணில் அதிரடி!]
வெளியேறிவிட்டார்
இந்த நிலையில்தான் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகினார் ராஜபக்சே. இவருடன் இவரது மகன் நமல் ராஜபக்சேவும் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது இலங்கை அரசியலை கவனிப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எத்தனை பேர்
ராஜபக்சேவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் சிறிசேனாவிற்கு நெருக்கமான தலைவர்கள் ஆவர். இவர்கள் எல்லோரும் சிறிது நேரம் முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.
எந்த கட்சி
இவர்கள் எல்லோரும் இலங்கை பொதுஜன முன்னணி (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சியில் இணைந்தனர். ஏற்கனவே இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் (அதிபர் தேர்தலுக்கு பின்) இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இருந்தார் ராஜபக்சே. தற்போது மீண்டும் அதே கட்சிக்கு ராஜபக்சே சென்றுள்ளார். இந்த கட்சித்தான் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி வைப்பார்
ஜனவரியில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக இவர்கள் கட்சி மாறியுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடியும் என்று நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இவர்கள் சிறிசேனவின் கட்சியுடனே கூட்டணி வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் 50 முன்னாள் எம்பிக்கள் சிறிசேனவை விட்டு சென்று இருப்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.