இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நிறைவு- சுமார் 65%- 70% வாக்குகள் பதிவு- நாளை வாக்கு எண்ணிக்கை
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இன்றைய தேர்தலில் மொத்தம் 65% முதல் 70% வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வாக்குகள் நாளை காலையில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இலங்கையின் 9-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 196 பேர் தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். 29 பேர் நியமன எம்.பிக்கள்.
இலங்கையில் 22 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,62,63,885 பேர் வாக்காளர்கள். 7,452 பேர் வேட்பாளர்கள்.
உலகை உலுக்கிய லெபனான் வெடிவிபத்து- பெய்ரூட்டில் இலங்கை, பெல்ஜியம் தூதரகங்களுக்கும் சேதம்
சுமார் 70% வாக்கு பதிவு
நாடு முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது. மாலை 5 மணிவரை சுமார் 65% முதல் 70% வரையிலான வாக்குகள் பதிவாகின.
நாளை வாக்கு எண்ணிக்கை
வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்கு பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாளை காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதனை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார்.
பலத்த போட்டி
மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
மகிந்த வெல்வார்?
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மகிந்த ராஜபக்சேதான் மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. ஈழத் தமிழர் வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூடுதல் இடங்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாக்குப் பதிவு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.