முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று! தமிழர்கள் நினைவேந்தல்
கொழும்பு: இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர், 10 ஆண்டுகளுக்கு முன்பாக, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளுடன் நிறைவடைந்தது.
இலங்கை இறுதிப் போரின் போது, அனைத்து தரப்பினராலும், கைவிடப்பட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது.
கூடாரங்களில் மக்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் இருந்தன. அதில் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதி. சுற்றிலும் இலங்கை அரசின் ராணுவம் முற்றுகையிட்டு விட்ட நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள திறந்தவெளியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடாரங்களை கட்டி தங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் வாகனங்களும் அங்கு அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
குண்டுகள் வீச்சு
வாகனங்களுக்கு அடியில் பதுங்கு குழிகளைத் தோண்டி, தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர். ஆனால், ஈவு இரக்கம் ஏதுமின்றி, அந்த மாபெரும் மக்கள் கூட்டத்துக்கு நடுவே ஷெல் குண்டுகளை அள்ளி வீசியது இலங்கை ராணுவம். இதில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பதுங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.
உயிர் வலியில் தமிழ் உறவுகள்
உயிர் போகும் வேளையில், உதிரம் வழிந்தோட அவர்கள் அலறிய சத்தம் இன்னும் தங்கள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருப்பதாக, இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, தற்போது வீடு, நிலம், உறவுகளை இழந்து, எதிர்காலம் சூனியமாகிவிட்ட நிலையில் உள்ள மக்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த கொடூர தாக்குதலில் பலர் காணாமல் போயினர். பல நூறு பேர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இவ்வாறு 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தமிழ் மக்கள், தங்கள் ரத்தத்தை ஆகுதியாக்கி, ஆறாக ஓட விட்ட மண்தான் முள்ளிவாய்க்கால். இதன் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நினைவேந்தல்
இதையொட்டி அங்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அணிதிரள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் அமைதியான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உறவுகளை இழந்தவர்கள் ஆண்டுதோறும் இந்த நாளில் அங்கு சென்று கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி நெஞ்சை கரைப்பதாக இருக்கும். இன்றும் அது போன்ற ஒரு சோக நிகழ்வு அங்கு அரங்கேற உள்ளது.
இரா.சம்பந்தன் அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதுபற்றி கூறுகையில், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெருமளவிலான தமிழ் உறவுகள் அரசாங்கப் படைகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர். தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் சாவைத் தழுவிய மண் முள்ளிவாய்க்கால். விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை ஆகுதியாக்கிய மண். போர் விதிகளுக்கு முரணாக இறுதிப்போர் இந்த மண்ணில் நடைபெற்றது.
அனைத்து தரப்பும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்து தரப்பும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு வர வேண்டும். சுடரேற்றி அஞ்சலி செலுத்தி இழந்த உறவுகளை நினைவு கூற வேண்டும். இவ்வாறு இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.