ஈஸ்டர் தாக்குதல் எதிரொலியால் கடும் சரிவில் இலங்கை சுற்றுலா துறை... மீட்டெடுக்க பெரும் முயற்சி!
கொழும்பு: ஈஸ்டர் நாள் தாக்குதல்களால் இலங்கை சுற்றுலாதுறை நிலைகுலைந்து போயுள்ளது. சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இலங்கை அரசும் சுற்றுலா தொடர்புடைய நிறுவனங்களும் படுதீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 5%. கடந்த ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்கள் சுற்றுலா துறையை கிடுகிடுக்க வைத்துவிட்டது.
ஈஸ்டர் நாள் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதில் 40-க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதனையடுத்து இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்வதற்கு தடை விதித்து அறிவிக்கைகள் வெளியிட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.
சுற்றுலா பயணிகளுக்காக காத்திருந்த கடற்கரை விடுதிகள் காற்று வாங்கின. பழமையான புத்த விகாரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஹோட்டல்களில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் பெருமளவு எண்ணிக்கையில் அவற்றை ரத்து செய்தனர்.
இதனால் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது இலங்கை சுற்றுலாத்துறை. தற்போது சுற்றுலா துறை மீட்டெடுக்க கவர்ச்சிகரமான அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுலா துறையை மேம்படுத்த அடுத்த 6 மாத காலத்தை பிரசார காலமாகக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
பல உல்லாச விடுதிகளில் அறைகளின் கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளன. மேலும் இலவச ஆயுர்வேத சிகிச்சை, இலவச காலை உணவு, இலவச வாகன ஏற்பாடுகள் என அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை இலங்கை இறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
மீளுமா இலங்கை சுற்றுலா துறை?