இலங்கையில் பொது சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு தள்ளலாம்! முப்படைகளுக்கு பாதுகாப்பு துறை அனுமதி
கொழும்பு: இலங்கை நாட்டில் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க அந்நாட்டு பாதுகாப்புத் துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இலங்கை நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான அளவுக்குச் சரிந்துள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிதி நெருக்கடி அங்கே ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல், சுற்றுலாத் துறை முடங்கியது என பல்வேறு காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. கொரோனாவுக்கு பின் அங்குள்ள பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் அங்குப் பொருளாதார அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், பொருளாதாரம் மேம்படவில்லை. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தைத் தொட்டுள்ளது. பொருளாதார நிதி நெருக்கடி காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ராஜபக்ச ராஜினாமா
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது. இதன் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என ராஜபக்ச பிடிவாதம் பிடித்தார். இருப்பினும், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் நேற்றைய தினம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
Recommended Video

திடீர் வன்முறை
பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் மக்கள் அரசு உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்குத் தேசம் விளைவித்தனர். இந்த வன்முறை காரணமாக நேற்றைய தினம் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனிடையே வன்முறையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்புத் துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு
இலங்கையில் அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சொத்துகளைச் சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படைகளுக்கும் அனுமதி அளித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இதுபோன்ற உத்தரவுகள் துன்பத்தைத் தருவதாக உள்ளது. இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ராணுவம் இந்த விவகாரத்தில் களமிறங்கினால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications