2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கையில் இன்று சினிமா தியேட்டர் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை, தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஈஸ்டர் தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியான நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று காவல்துறை மீண்டும் தீவிர சோதனைகளை நடத்தி வந்தது.
வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி... பகீர் தகவல்
வாகன தணிக்கைகள்
குறிப்பாக சந்தேகத்துக்கிடமான வாகனங்களை காவல்துறையினர் தணிக்கை செய்தனர். தலைநகர் கொழும்பு நகரிலுள்ள வெல்லவட்டா என்ற பகுதியில், சவாய் என்ற திரையரங்கு உள்ளது. அதன் முன்பாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது.
வெடித்தது
அதனை சோதித்தபோது, சீட்டுக்கு அடியில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பத்திரமாக மீட்டு சென்று வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். அது முடியாததால் வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இதை செய்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
10வது சம்பவம்
இந்த குண்டு கண்டுபிடிப்பு எண்ணிக்கையையும் சேர்த்தால், இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 10 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதில் 8 இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்பலியானது. மேலும், இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், பைப் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. அது 6 அடி நீளம் கொண்டது. இருப்பினும் பத்திரமாக அது செயலிழக்கச் செய்யப்பட்டது.
பாதுகாப்பு
இலங்கையில் மக்கள் கூடும், இன்னும் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.