தீவிரவாதிகளுடன் இலங்கை அமைச்சருக்கு தொடர்பு.! சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் அளிப்பு
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் அவருக்கு எதிராக 64 எம்.பி-க்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
ரிஷாட் பதியுதீன் இலங்கையின் தொழில்துறை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராக உள்ளார். மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
இவருக்கு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தலைமையில், எதிர்கட்சிகள் ஆதரவுடன் இதற்கான தீர்மானம் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மொத்தம் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை விரைவில் துவக்குமாறு, சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் பாஜகவிடம் விற்பனையாகி விட்டது: மம்தா பானர்ஜி கடும் தாக்கு
இந்நிலையில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.
மேலும் தன் மீதான நம்பிக்கை போகும் அளவிற்கு எந்த வேலையையும் தான் இதுவரை செய்ததில்லை என கூறியுள்ளார். இஸ்லாமிய பெயரை கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய காரணத்தால் அவர்களுடன் என்னையும் சேர்த்து தொடர்புபடுத்த பலர் சதிதிட்டம் செய்வதாக புகார் கூறியுள்ளார்.
ஆனால் இனவாத பின்னணி கொண்ட இந்த முயற்சிகள் வெற்றியடையாது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்க முடியாதென்றும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.