இலங்கையில் டிவிஸ்ட்.. தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் திணறல்.. மாஜி புலிகளின் உதவியை நாடும் அரசு!
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கவும் மேற்கொண்டு நடைபெறாமல் தடுக்கவும் இலங்கை ராணுவம் முன்னாள் விடுதலைப் புலிகளின் உதவியை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று கிறிஸ்தவர்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும் இதில் சர்வதேச தொடர்புகள் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது. தமிழகத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் நடைபெற்று வரும் விசாரணையில் இலங்கையில் உள்ள சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் உதவியோடுதான் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு இந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது என்பதை இலங்கை விசாரணை அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன. அதோடு இலங்கையில் தொடர்ந்து பல இடங்களிலும் குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்து செயல் இழக்க வைத்தனர்.
இந்த நிலையில் இலங்கை அரசு முன்னாள் விடுதலைப் புலிகளின் உதவியை நாடியுள்ளது. இலங்கை ராணுவ அதிகாரிகள் முன்னாள் விடுதலைப் புலிகளை அழைத்து பேசியுள்ளனர். ராணுவ அதிகாரிகளுடன் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் அனைவரும் தற்போது இலங்கை அரசு மேற்கொண்ட விசாரணைக்கு பிறகு சாதாரண மக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களிடம் பேசிய ராணுவ அதிகாரிகள் நடந்து முடிந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் போன்று இனி யாழ்ப்பணத்திலும் நடக்க கூடாது அதற்கு உங்களது உதவி தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் தற்போது ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கும் இராணுவத்தினருக்குமான சந்திப்பிற்கு பிறகு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் துளசி, இலங்கை அரசு உள்நாட்டு பாதுகாப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை அவர்களால் கண்காணிக்க முடிவதில்லை.
சர்வதேச அளவில் செயல்படும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை தடுக்கும் யுக்தி எதுவும் இலங்கை அரசிடம் கிடையாது, 30 வருட தாக்குதலின்போது இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த 10 வருடங்களில் இல்லாமல் போனதே இப்போது நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். வன்னி உள்ளிட்ட பகுதிகள் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குட்பட்டு இருந்தபோது அங்கு திடீர் செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு இருந்து கொண்டு இருந்தது.
ஆனால் இலங்கை அரசு இப்போது திடீர் செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் குறித்து எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. இவர்களிடமும் ஏழைகளாக இருந்து திடீர் பணக்காரர்களாக மாறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்தும் இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய துளசி இலங்கை ராணுவம் தன்னை சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டதாகவும் துளசி தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்றால் தனக்கு எதிர்காலத்தில் பெரிய அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்றும் கூறிய அவர் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு யுக்திகளை, இலங்கை ரானுவத்திருடன் பகிர்ந்துக் கொள்ள தயார் எனவும் அவர் உறுதியளித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள இந்த துளசி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது