சிறிசேனா திடீர் பல்டி.. நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கினார்.. 5ம் தேதி கூடுகிறது!
இலங்கையில் நாடாளுமன்ற முடக்கம் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற முடக்கம் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்கள் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க காத்திருக்கிறார்கள்.
[ரணில் மீண்டும் பிரதமரானால் அதிபராக இருக்க மாட்டேன்... சிறிசேனா தடாலடி! ]
என்ன செய்தனர்
இந்த நிலையில்தான் ரணில் விக்ரமசிங்கே தனது ஆதரவாளர்களின் ஆதரவு கடிதத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அளித்தார். அதை தொடர்ந்து 125 நாடாளுமன்ற எம்பிக்கள், சபாநாயகரிடம் உடனே நாடாளுமன்றத்தை கூட்டும்படி கோரிக்கை வைத்து கடிதம் அளித்தனர்.
சந்திப்பு நடத்தினார்கள்
இதையடுத்து நேற்று சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் அதிபர் சிறிசேனாவும் சந்தித்துக் கொண்டனர். கரு ஜெயசூர்யா பழைய பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக உள்ளார். அதிபர் சிறிசேனா புதிய பிரதமர் ராஜபக்சேவிற்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் சந்தித்துக் கொண்டனர். இதில் சபாநாயகரின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் ஒப்புக்கொண்டார்
கூடும்
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததை அதிபர் திரும்பப்பெற்றுள்ளார்.
பரபரப்பு
இலங்கையில் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அன்று உண்மையில் பிரதமர் யார், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று முடிவுகள் தெரியவரும். இதனால் வரும் திங்கள் கிழமை இலங்கை அரசியலில் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது.