கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்.. ஏப்ரல் 25ம் தேதி தேர்தல்.. அதிபர் அதிரடி
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டார், அதிபர் கோத்தபாய ராஜபக்சே.
இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை கோத்தபாய நியமித்தார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் மார்ச் 1ம் தேதியுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் அல்லது நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில்தான் கலைக்கப்பட முடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் நேற்றுடன் பதவி காலம் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால் இன்று, நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணியளவில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்கள் துவங்கும்.
இலங்கையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது. அப்போது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வானார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.