ராஜபக்சே மகனுக்கு கல்யாணம்...! சொந்தபந்தங்கள் மட்டும் பங்கேற்பு
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலுக்கு இன்று வீரகேடியாவில் திருமணம் நடைபெற்றது.
மகிந்த ராஜபக்சே கடந்த 2004-ம் ஆண்டு இலங்கை பிரதமராகி பின்னர் தேர்தலில் போட்டியிட்டு அதிபராக வந்தார். இலங்கையின் 6-வது அதிபராக அவர் வந்ததை அடுத்து, அங்கு விடுதலை புலிகளுக்கும்-அரசுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியது. போரில் அப்பாவி தமிழர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஆளாகிய ராஜபக்சே தீவிர அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கினார்.
பின்னர், அண்மையில் மீண்டும் தனது சடு குடு ஆட்டத்தை தொடங்கிய ராஜபக்சே ரணிலுக்கு எதிராக களமாடினார். ஆனால் அது எடுபடவில்லை. இந்நிலையில் ராஜபக்சேவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவரது மூத்த மகன் நமலுக்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
மகன் திருமணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட யாருக்கும் ராஜபக்சே அழைப்பு விடுக்கவில்லை. தனது நெருங்கிய சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து திருமண விழாவை வைத்துக்கொண்டார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை விட்டுவிட்டு தனது குடும்பத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தமாட்டார் ராஜபக்சே. அவருக்கு கூட இந்த முறை அழைப்புவிடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ராஜபக்சேவுக்கு நமல், யோசித்தா, ரோகிந்தா என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதில் விநோதம் என்னவென்றால் அண்ணன்களுக்கு திருமணம் முடியும் முன்பே, ராஜபக்சேவின் கடைசி மகன் ரோகிந்தா கடந்த ஜனவரி மாதமே தனது காதலியை திருமணம் செய்துகொண்டது தான்.