இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்- நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு- முதல் முறையாக 35 பேர் போட்டி!
கொழும்பு: இலங்கையில் 8-வது அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் அதிபர் தேர்தலில் முதல் முறையாக 35 பேர் போட்டியிடுகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 18-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல்கள் நடைபெற்றன.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராக சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 35 பேர் களத்தில் உள்ளனர்.
முதல் முறையாக அதிக வேட்பாளர்கள்
ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, 2 பெண்கள், பவுத்த பிக்குகள், மாஜி ராணுவ தளபதிகள் ஆகியோரும் வேட்பாளர்கள். இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவது தற்போதுதான் முதல் முறையாகும்.
சஜித்- கோத்தபாய போட்டி
இதில் சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்சே இடையேயாதான் கடும் போட்டி நிலவுகிறது. தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவை தெரிவித்துள்ளன. இருப்பினும் கருணா, ஈபிஆர்எல்எப் வரதராஜ பெருமாள் உள்ளிட்டோர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிக்கின்றனர்.
காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு
இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,59,92,96 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்கான நீண்ட வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
மாலை முதல் வாக்கு எண்ணிக்கை
மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் மாலை 5.15 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும். நள்ளிரவில் முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதிகாலையில் இலங்கையின் 8-வது அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.
வெளிநாட்டு பார்வையாளர்கள்
இலங்கை அதிபர் தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இத்தேர்தல் கண்காணிப்புக்காக 3 இந்தியர்கள் உட்பட 14 சர்வதேச பார்வையாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.