குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து, இரண்டு இஸ்லாமிய இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அந்நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் ஆகிய இயக்கங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 8 இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. சர்ச்சுகள், நட்சத்திர ஓட்டல்கள் என மக்கள் கூடிய இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் வெளிநாட்டினர் உட்பட சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து உடனடியாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு, அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கபட்டது . தாக்குதலுக்கு காரணமானவர்கள், அவர்களது இயக்கங்கள் தொடர்பாக இலங்கை அரசு தீவிரமாக விசாரித்து வந்தது
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் பாதுகாப்பு செயலர் உட்பட பல மூத்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கூறி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் ஆகிய இயக்கங்கள் தடை செய்யப்படுவதாக அவசரகால சட்டத்தின் கீழ் அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இந்த 2 அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனவின் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு கூறியுள்ளது.