சிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்துள்ளார் அந்த நாட்டு அதிபர் சிறிசேனா. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாக்களித்தது. அடுத்தடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் ராஜபக்சே அரசு தோற்றது.
வேறுவழியில்லாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ஷ. இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நியாயம் இருப்பதாக தீர்ப்பளித்தது. எனவே, மீண்டும் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கைபோல, சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இதனை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஏற்றுக்கொண்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ராஜபக்ஷவுக்கு ஆதரவு கேட்டு அவருக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்த நிலையில் இனவெறி நடவடிக்கையாக சம்பந்தனை பதவியை விட்டு சிறிசேனா நீக்கி இருக்கக்கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான சுமந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். சிறிசேனாவின் ஆட்டம் முடியவில்லை என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்துள்ளது.