இந்திய வம்சாவளித் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த மாஜி அமைச்சருக்கு கிடைத்த பதிலடி- வைரல் வீடியோ
Recommended Video
கொழும்பு: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இந்திய வம்சாவளித் தமிழரான மலையகத் தமிழரை இழிசொல்லால் விமர்சித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிநீரை தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இலங்கை மலையகத் தமிழரை இழிவான சொல்லை பயன்படுத்தி விமர்சித்தார். இதனை திரும்பப் பெற வேண்டும் என்று மற்றொரு முன்னாள் அமைச்சரான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
ஆனால் அதாவுல்லா ஏதோ விளக்கம் தர முயன்றார். ஒருகட்டத்தில் அதாவுல்லா முகத்தின் மீது குடிக்கும் நீரை தூக்கி வீசினார் மனோ கணேசன். பின்னர் அந்நிகழ்ச்சி நெறியாளர் அதாவுல்லா பயன்படுத்திய சொல்லை ஏற்க முடியாது என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அத்தாவுல்லா சொல்லவந்த விடயம் சரி, பிழை என்பதற்கு அப்பால் மலையக சமூகத்தை அவ்வாறு விழித்தது கண்டிக்கத்தக்கது. அதேவேளை, எம்.பி. @ManoGanesan பொதுமேடையில் இவ்வாறு நடந்துகொள்ளாமல் அத்தாவுல்லாவுக்கு ஆக்கபூர்வமான பதிலை வழங்கியிருக்கலாம்.#lka #srilanka pic.twitter.com/UPoD6q5JFV
— Maatram (@MaatramSL) November 25, 2019
இது குறித்து மனோ கணேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், பதிவு செய்யப்பட்ட நிழ்ச்சியின் போது தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.
அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்து, இந்நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளே காரணம் என்று, முழுக்க முழுக்க பெரும்பான்மை நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் "சூட்டை", நான் எறிந்த "நீர்" குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.