இலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகல்- கலைக்கப்படுகிறது ரணில் அரசு?
Recommended Video
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கலைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரணில் அரசின் அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே வீழ்த்தினார். இதனையடுத்து இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோத்தபாய இன்று அனுராதபுரத்தில் பதவியேற்க உள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே.. இன்று காலை பதவி ஏற்கிறார்!
இந்நிலையில் பிரதமர் ரணிலின் அமைச்சரவை சகாக்களான மங்கள சமரவீர, அஜித் பெரேரா, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் பதவி விலகி உள்ளனர். இன்று மாலை அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே அரசு பதவி விலகும் முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே அடுத்த பிரதமராக தினேஸ் குணவர்த்தனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை பிரதமராக கோத்தபாய நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.